ஹூஸ்டனில் ஒரு தமிழ்ப் புத்தாண்டு - கனலி (Tamil professor at UH, USA)

ஹூஸ்டனில் ஒரு தமிழ்ப் புத்தாண்டு

Govt. of India has established the ICCR Chair of Indian Studies at University of Houston. The first visiting professor is Dr. T. Vijayalakshmi, Professor of Tamil, University of Kerala.
https://www.uh.edu/class/news/archive/2023/may/class-welcomes-visiting-professor-and-first-iccr-chair-of-indian-studies-to-promote-cultural-exchange/

https://www.whitehouse.gov/briefing-room/statements-releases/2023/06/22/joint-statement-from-the-united-states-and-india/
"56. The Leaders welcomed the establishment of the Tamil Studies Chair at the University of Houston and reinstating the Vivekananda Chair at the University of Chicago to further research and teaching of India’s history and culture."

https://twitter.com/ANI/status/1672400408722153472
"This is the best time to invest as much as possible in India. The research centre of Google's AI in India will work on more than 100 languages. With the help of the Indian Govt, Tamil Studies chair will be established here at University of Houston" Indian PM

India is funding the establishment of a Tamil Studies Chair at the University of Houston.
https://twitter.com/nsitharamanoffc/status/1672945593831034883
 

பேரா. த. விஜயலட்சுமி தமிழ்ப் புத்தாண்டு பற்றிய நல்ல கவிதை எழுதியுள்ளார்:

ஹூஸ்டனில் ஒரு தமிழ்ப் புத்தாண்டு
============================

மழைக்கால இரவின் சிலிர்ப்பு
மரங்களின் இலைகளில் .
அடித்துச் செல்லப்பட்ட வருட
அழுக்குகளின் எச்சங்கள்
ஓடை இடுக்குகளில்.

கார்மேகத்தை விரட்டிய களிப்பில்
வெள்ளை மேக வீரர் கூட்டம்
கண்ணாமூச்சியாடி
சூரியன் வரவு.

மழை ஓய்ந்ததின் மகிழ்ச்சியில்
வானம் எங்கும் விமானங்கள்.
சக்கரத்தைக் களைந்து
அவசரத்தைப் பூண்ட வாகனங்கள்.

மழைக்கு எதிராய் மாநாடு நடத்தும்
மின் கம்பி பறவைக் கூட்டங்கள்.
மழைக்கு நன்றி சொல்லி  
ஓக்கு மரக் கொட்டைகள் பொறுக்கும் அணில் பிள்ளைகள்.

ஆமையாய் நகரும்
சரக்குப் புகைவண்டிகள்.
அடிவானத்தில் ஓவியமாய்
பரவும் ஆலைப் புகைமூட்டங்கள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
கண்ணில் படாத மனிதர்கள்.
கார்களாக மட்டும் தென்படும் நடமாட்டம்.

மனிதர்கள் நிறைந்த குடியிருப்பு;
மயான அமைதி நிலை நிற்பு.
என்றும் இல்லாமல் இன்று..... தூரத்தில்...... யார் அது.?

பயணக் களைப்பு முகத்தில்....
ஓ......இது அரை நாள் தாமதித்து
அமெரிக்கா வந்த சித்திரைப் பெண்ணா?
தாமதிப்பினும் தலைகாட்டிய மகிழ்ச்சியில் தமிழர்...

கோவில் கொண்டாட்டங்களையும்
மாலை மரியாதைகளையும்
பொங்கல் ருசிகளையும்
கை நீட்டக் களிப்புகளையும்

நினைவுக் குவியலில் தோண்டி எடுத்து
துடைத்துக் கழுவி தேனொழுகப் பிள்ளைகளிடம்
அசைபோடும் அப்பாக்கள்...
அறுபட்ட கழுத்தை
அசையாமல் பிடித்துப் பிள்ளைகள்.

ஜிபே கை நீட்டங்கள்
அலையடித்து கோவில்கள்
ஆங்கில வேண்டுதல்கள்
பதாம் பருப்பு பிரசாதங்கள்...!

சரவணபவாக்களில் சலசலப்பு
குமார்சுகளின் கொண்டாட்டம்
உடுப்பிகளின் உற்சாகம்
அப்பப்பா கலைத்து நகர்ந்த சித்திரைப் பெண்

ஆச்சரியமாய் திரும்பிப் பார்த்தாள்
மழலை மொழித் தமிழ் கேட்டு.....
அமெரிக்காவில் தமிழ் இருக்கையா......!

இங்கு என்ன சத்தம்.....
ஓ... ஓ.. இது பாப்பையாவா?
பட்டிமன்றம் இன்றிப் புது வருடமா?

இத்தனை நினைவுகளை
இனிதே சுமக்கும் தமிழர்களின் மன எஞ்சினை
உலுக்கி முடுக்கி
அடுத்த வருடத்திற்காய் ரீபூட் செய்தாள்.

போன வருடம் போயிட்டு வரட்டும்
இந்த வருடம் இனிதே இனி வரட்டும்

மங்களம் பொங்க
மனங்கள் குளிர
மனிதம் வளர  
மலரட்டும்  இனிதே இப்புத்தாண்டு.

    வாழ்த்துக்களுடன்
    கனலி’ விஜயலட்சுமி
    ஹூஸ்டன் பல்கலைக்கழகம்

உசாத்துணை - நாவலர் மாநாடு விழா மலர், 1969

 உசாத்துணை

அ.வி.ம

(நாவலர் மாநாடு விழா மலர், 1969.

நல்லூர், யாழ்ப்பாணம். பக். 57-60

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, கொழும்பு.)

 https://noolaham.net/project/88/8789/8789.pdf

நாவலர் பெருமான் சைவத்துக்கும் தமிழுக்கும் செய்து தந்த படைப்புக்களைப் பற்றித் தமிழ் கூறு நல்லுலகம், அவருக்குப் பின் சென்று கழிந்த ஒரு நூற்றாண்டாக வியந்தும் நயந்தும் பேசி, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது. பள்ளியிற் பயிலும் பச்சிளஞ் சிறார் முதற் பல்கலைக் குரிசில்கள் வரையும் படித்துப் பயன் கொள்ளத்தக்க பல நூல்களை அப் பெருமான் ஆக்கியும், ஆய்ந்து அச்சேற்றியும் அளித்துள்ளார். இதனால், இளைஞரும் முதிர்ந்தோரும் இவரைத் தம் உசாத்துணையாகக் கொள்ளக் காணலாம். தமிழ் என்னும் கடலிலே இலக்கண வழுக்களாகிய பாறைகளையும், ஐயந் திரிபுகளாகிய சுழிகளையும் விலக்கி, இன்பமாக முன்னேறிச் சென்று எய்தவேண்டிய துறையை அடைவதற்கு இவருடைய படைப்புகளே எமக்கு ஏமப்புணையாக உதவுகின்றன.

கல்வியை வளர்த்துப் பரப்புவதற்கு வாழும் தமிழே வாய்ப்புடைய கருவியெனக் கண்டு பேச்சு வழக்கிலுள்ள தமிழை இலக்கண நெறிக்கமையச் செம்மைபடுத்தி, இனிய பல உரைநடை நூல்களை எழுதி உதவியவர் நாவலர். இவருடைய உரைநடை நூல்களிலே பண்டை உரையாசிரியர்களின் இலக்கணச் சீர்மையும் பேச்சு வழக்குத் தமிழின் நேர்மையும் கலந்துள்ளமையால், அவை காதுக்குங் கருத்துக்கும் இனிக்கின்றன. இன்று, பேச்சு வழக்கிலே பிழைபட வழங்கும் எத்தனையோ சொற்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றின் திருந்திய வடிவத்தை நாம் நாவலருடைய பாலபாடங்களிற் பார்க்கிறோம். அனுபானம். அந்தியேட்டி, சர்த்தி, புடவை, பூசினிக் காய், என்பன போன்ற சொற்களைத் திருத்தமாக எழுதத் தெரியாதவர், படித்தவருள்ளேயே பலர் இன்றும் இருக்கின்றனர். அநாதப் பிள்ளை (அ+நாத: தலைவனை இல்லாத) என்ற சொல்லை அநாதைப் பிள்ளை என்று எழுதுவோர் எத்தனை பேர்? முதற் புத்தகம் என்று எழுதுவதறியாமல் 'முதலாம் புத்தகம்' என்று பிழையாக எழுதுவோர் எத்தனை பேர்? இருபத்து மூன்று, நூற்று முப்பத்து மூன்று, ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பது என்பன போன்ற எண்ணுப் பெயர்களை இருபத்தி மூன்று' 'நூற்றி முப்பத்திமூன்று' 'ஆயிரத்தித் தொளாயிரத்தி ஐம்பது' என்று பிழையாக உச்சரிப்பதையும் எழுதுவதையும் நாம் நாளும் காண்கிறோம். இன்னோரன்ன சொற்களையும் சொற்றொடர்களையும் எவ்வாறு திருத்தமாக எழுத வேண்டுமென்பதை, நாவலர் முதற் பாலபாடத்திலிருந்தே கற்பித்துள்ளார். பிழை யில்லாமலே பேசப் பழகு என்பது நாவலரின் முதற் பால பாடத்திலே முப்பத்தேழாம் பாடத்திலே வரும் பதினொராம் வாக்கியம். இப் பாலபாடங்களை முறையாகக் கற்றுவரும் மாணாக்கர் பாழ்ங்கிணறு, வரகுசோறு, புழுகுசம்பா, கீழ் காற்று, மேல் காற்று (இவை முதற் புத்தகத்தில் வருவன) ஏரிகரை, விறகு கட்டு (இவை இரண்டாம் புத்தகத்தில் வருவன) என்பன போன்ற சொற்றொடர்களைப் புணர்ச்சி வழுவில்லாது திருத்தமாக வழங்கப் பழகிக் கொள்வர்.

இனிப் பழைய சொற்களும், சொற்றொடர்களும் வாக்கிய அமைப்புக்களும் காலப்போக்கிற் புதுவடிவம் பெற்று, உலக வழக்கில் நிலைபெற்றுள்ள விடத்து, நாவலர் அவற்றையும் தழுவிக் கொண்டுள்ளார். வெயில் என்பது பழைய வடிவம்; வெய்யில் என்பது புதுவடிவம்; நாவலருடைய பாலபாடங்களில் வெய்யில் என்ற சொல்லே பலகாலும் பயின்று வருகின்றது. இவ்வாறே வியர், வியர்வை என்ற பழைய சொற்களுக்குப் பதிலாக, ‘வெயர்வை' என்ற புதுவடிவத்தையே நாவலர் பெரும்பாலும் கையாண்டுள்ளார். குற்றுதல், பழையது; குத்துதல் புதியது. நாவலர், அரிசி குற்றுகிறேன் (முதற் புத்தகம் 13 ஆம் பாடம்) என்றும், 'நெற்குத்துதல்' (நான்காம் புத்தகம், கற்பு) என்றும் ஆண்டு காட்டியுள்ளார். 'மற்று' என்ற இடைச் சொல்லடியாகப் பிறக்கும் பெயரெச்சம் மற்றை என்று வருவதே பண்டை வழக்கு; பிற்காலத்தில் அது மற்ற என்று வழங்குகிறது. நாவலர் இரு வடிவங்களையும் ஆண்டுள்ளார்.

(உ-ம்) 1. மற்றைப் பெண்கள் என்றது கன்னியரையும் பிறன் மனைவியரையும் பொதுப் பெண்களையும். (நான்காம் புத்தகம். வியபிசாரம்)

2. மற்ற நாள் உதய காலத்திலே சிவபத்தர்கள் எல்லாருங் கூடிவந்து, சுந்தர மூர்த்தி நாயனாருக்குப் பரவையாரை விதிப்படி விவாகஞ் செய்து கொடுத்தார்கள். (பெரிய புராண வசனம், சுந்தரமூர்த்தி நாயனார் புராணம். பக்கம் 21)

இவை 'கடிசொல்லில்லைக் காலத்துப் படினே. (தொல். எச்சவியல் சூ. 56) என்ற தொல்காப்பியர் விதியால் அமைத்துக் கொள்ளப்படும். இவ்வாறே ஏனைய வழக்குக்களையும் காணலாம்.

பொரூஉப் பொருளில் வரும் ஐந்தாம் வேற்றுமையை 'இன்' உருபு கொடுத்து எழுதுவதே பண்டை வழக்கு. தொல்காப்பியர் இதனை

'இதனின் இற்று இது' என்ற வாய்பாட்டால் விளக்குவர் (தொல். சொல். வேற்றுமை இயல். சூ.16) நன்னூலாரும் 'இன்' (இல் என்பது இன் உருபின் வேற்றுவடிவம்) உருபே கூறியுள்ளார். ஆனால், இக்கால வழக்கில் இது வேறுபட்டு வருவதை உணர்ந்த நாவலர், தாம் எழுதிய இலக்கணச் சுருக்கத்திலே இப் புது வழக்குக்கு விதி செய்து தந்துள்ளார் (இவர் பொரூஉப் பொருளை எல்லைப் பொருள் என்பர்.)

"ஒரோவிடத்து எல்லைப் பொருளிலே காட்டிலும், பார்க்கிலும் என்பவைகள், முன் ஐகாரம் பெற்றுச் சொல்லுருபுகளாக வரும் (இலக்கணச் சுருக்கம், அங்கம் 211)

'அவனைக் காட்டிலும் பெரியனிவன்' என்றும் 'இவனைப் பார்க்கிலுஞ் சிறியனவன்' என்றும் அவர் இதற்கு உதாரணமுங் காட்டியுள்ளார். ஆயினும், தம்முடைய பாலபாடங்களில் இந்த அமைப்புக்களோடு, இன்னுஞ் சில புதிய அமைப்புக்களையும் தந்துள்ளார்.

உ-ம்: 1. என்னைப் பார்க்கினும் அவன் நன்றாக வாசிப்பான்.

2. பணத்தினும் பார்க்கப் பெரியது நல்ல பெயர். (முதற் பாலபாடம், 28ஆம் பாடம்)

3. கல்வியும் அறிவும் நல்லொழுக்கமும் செல்வமும் அழகும் தமக்குப் பார்க்கிலும் பிறருக்கு மிகப் பெருகல் வேண்டு மென்று நினைத்தல் வேண்டும். (பாலபாடம், நான்காம் புத்தகம் நல்லொழுக்கம்)

இனித் தேற்றப் பொருள் தரும் வேண்டும் என்னுஞ் சொல் 'தல்' 'அல்' என்னும் ஈற்றை யுடைய தொழிற் பெயரையடுத்து வருவதே பண்டை வழக்கு. உ-ம் போதல் வேண்டும், உண்ணல் வேண்டும். (பார்க்க, நன்னூற் காண் டிகை உரை, சூ.339) ஆனால், இக்கால வழக்கில் அச்சொல் (அதாவது வேண்டும் என்பது) செய வென்னும் வாய்பாட்டு எச்சச் சொல்லோடு (இதனை ஈறுதிரிந்த தொழிற்பெயர் என்பர் ஒரு சாரார்) சேர்ந்தே பெரும்பாலும் வரக் காண்கின்றோம். நாவலர் இருவகை வழக்கையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

உ-ம்: 1. இப்படிப்பட்ட கடவுளை நாம்......எந்த நாளும் வணங்கித் துதித்தல் வேண்டும். (பாலபாடம் முதற் புத்தகம். 45 ஆம் பாடம்)

2. நம்முடைய செயல்கள் அனைத்தும் சுருதிக்கும் யுக்திக்கும் இசைந்திருக்க வேண்டும் (பாலபாடம், இரண்டாம் புத்தகம், நீதிவாக்கியம். 31)

இவை “புதியன புகுதல்" என்ற விதியால் (நன்னூல் சூ.462) அமைத்துக் கொள்ளப்படும். ஏற்கும் நிலையம் என்ற சொற்கள் ஏற்கு நிலையம் என்றாகாது, ஏல் நிலையமென்றே ஆகுமென இக் காலத்திற் சிலர் வாதிக்கின்றனர். இத்தகையோர், நாவலர் எழுதிய இலக்கணச் சுருக்கத்தின் 146 ஆம் அங்கத்தில்,

'மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியினுங் கெடும்' என்று விதியிருப்பதைக் கண்டிலர் போலும். நாவலர், 'கற்குநூல்' போன்ற தொடர்களை வழங்கியுள்ளாராதலின், ‘ஏற்கு நிலையம்' என்பதும் ஏற்புடைத்தேயாகும்.

இக்காலத்தவர், 'ஏரிக்கரையிலே செம்படவர் மீன் உலர்த்துவர்' என்று எழுதுகின்றாராயினும், நாவலர் 'எந்த உயிரையும் கொல்லாத ஒரு சந்நியாசி ஒரு ஏரி கரை மேலே போனார்’ (பாலபாடம், 2 ஆம் புத்தகம், கதை 1) என்றே எழுதிக் காட்டுகிறார். நன்னூற் காண்டிகை உரையிலே,

'இயல்பினும் விதியினு நின்ற வுயிர்முன் க ச த ப மிகும் விதவாதன மன்னே (சூ.165)

என்ற சூத்திரத்தின் உரைப் பகுதியில் நாவலர் பின்வருமாறு இதற்கு இலக்கணம் அமைத்துள்ளார்.

1. "விதவாதன பெரும்பாலும் மிகும் எனவே, விதந்தன சிறுபான்மை மிகும் எனவும், விதவாதன சிறுபான்மை மிகா  எனவுங் கூறினாராயிற்று. அவை வருமாறு:

2. “ஏரிகரை, குழவிகை, குழந்தைகை 'பழ முதிர்சோலை மலைகிழவோனே' என்றும், கூப்புகரம்,ஈட்டுதனம், நாட்டு புகழ் என்றும் முறையே வேற்றுமையிலும் அல்வழியிலும் பின் விதவாதன மிகாவாயின”

இவ்விதியால், 'ஏரிக்கரை' என்றும் 'மலைக்கிழவோனே' எழுதுவது பிழையென்பது பெறப்படும். 

இனி, உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் வல்லின மெய்யின்முன் இயல்பாகும் என்ற விதியே தொல்காப்பியத்திலும், நன்னூலிலும் (சூ. 182) இலக்கணச் சுருக்கத்திலும் (அங்கம்.125) உளது.

இவ்விதிக் கமையவே, உருபுபுணர்ச்சி, வரகு சோறு, விறகுகட்டு, அரசுகட்டில், முரசுகண் என்றற் றொடக்கத்துச் சொற்றொடர்களை ஆன்றோர் வழங்கியுள்ளனர். ஆறுமுக நாவலரும் இவ்விதி பிழையாமலே எழுதியுள்ளார். ஆயினும், மரபுப் பெயர், மரபுச் சொல், மரபுத் தொடர் என்ற வழக்குகளை நாம் இக்காலத்திற் காண்கின்றோம். மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர், சிவஞானமுனிவர் போன்ற சான்றோரே மரபுப் பெயர் என்ற தொடரை ஆண்டுள்ளனர் (பார்க்க: நன் னூல் (சூ.274 மயிலைநாதர்), 275 (சங்கரநமச்சிவாயர்). இதனை 'விதவாதன் மன்னே' என்ற இலேசினாலே அமைத்துக் கொள்ளல் வேண்டும்.

இனி, நாவலர் பதிப்பித்த நூல்களிலே அவர் கொண்ட சில பாடங்கள் வியக்கத்தக்கவை. அவை ஏட்டுப் பிரதிகளில் உள்ள பாடபேதங்களுள் நூலாசிரியர் கருத்துக்குப் பொருந்தியவை எவையென நுனித்துத் துணியும் நாவலருடைய நுண்மாணுழை புலத்துக்குச் சான்றாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டொன்றைத் தருவாம். நாவலருடைய திருக்குறட் பதிப்பிலே,

'எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லைச்

செய்ந்நன்றி கொன்ற மகற்கு' (குறள் 110)

என்ற குறளுக்கு ஒப்புமைப் பகுதியாக, புறநானூறு, 34 ஆம் பாட்டு, அடிக்குறிப்பிலே காட்டப் பட்டுள்ளது, 'ஆன்முலையறுத்த....." என்று தொடங்கும் இப்புறப்பாட்டின் மூன்றாம் அடியைக் "குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்'' என்றே நாவலர் காட்டியுள்ளார். இதற்கொப்பப் பரிமேலழகருடைய உரைப்பகுதியிலும் "பெரிய வறங்களைச் சிதைத்தலாவது ஆன்முலையறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும் "குரவர்த் தபுதலும் முதலிய பாதகங்களைச் செய்தல்" என்ற வாக்கியம் வருகின்றது. இவ்வாறிருப்பவும் பிறர் பதிப்பித்த புறநானூற்றிலே, இச்செய்யுளடி "பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்” என்றே காணப்படுகிறது. அவர்கள், நாவலர் கொண்ட பாடத்தைப் பாடபேதமாகவும் காட்டினாரல்லர். இனித் திருக்குறளைப் பதிப்பித் தோருள் வித்துவான் ச. தண்டபாணி தேசிகர் (தருமபுர ஆதீனப் பதிப்பு) “குரவர்த் தபுதலும்" என்றே பரிமேலழகர் உரைப்பகுதியைக் கொண்டுள்ளார்; ஆனாற் பிறர் (சைவசித்தாந்தக் கழகப் பதிப்பு) "பார்ப்பார்த் தபுதலும்" என்று அப் பகுதியைத் திருத்தியுள்ளனர். இது, பிற பதிப்புக்களிலுள்ள புறநானூற்றுப் பாடலை அடியொற்றிச் செய்யப்பட்டதாகலாம். ஆனால், முன் சொன்ன தண்டபாணி தேசிகர், தாம் காட்டும் ஒப்புமைப்பகுதியில் இப் புறநானூற்றுப் பாட்டைக் காட்டி, 'குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் என்பது முன்னைய பாடம் போலும்' என்று அடிக்குறிப்பெழுதியுள்ளார். நாவலர் கொண்ட பாடமோ, பிறர் கொண்ட பாடமோ எது சிறந்ததென்பதை அறிவுடையோர் அறிந்து தெளிக.

இவ்வாறே, பத்துப் பாட்டில் வரும் திருமுரு காற்றுப் படையின் 38 ஆம் அடியை, ’கோழி யோங்கிய வென்றடு விறற் கொடி' என்று பிறர் பாடங் கொண்டு பதிப்பித்துள்ளார். வென்று பின் அடுதல் என்று பொருள் கொள்வது சிறவாதெனக் கருதிய நாவலர், தாம் பதிப்பித்த திருமுருகாற்றுப்படை உரையிலே, இவ் வடியை 'கோழி யோங்கிய வேன்றடு விறற் கொடி' என்று பாடங் கொண்டு, என்று அடு என்று சொற்களைப் பிரித்து 'பகைவரை வஞ்சியாது எதிர்நின்று கொல்லும்' என்ற நச்சினார்க்கினியாரின் உரைப்பகுதிக்குப் பொருந்த வைத்துள்ளார். ஏட்டுப் பிரதிகளிலே எகரத்துக்கும் ஏகாரத்துக்கும் வேற்றுமையில்லாமையால், வேன்றடு என்பதையே வென்றடு என்றும் வாசிக்கலாம். பிறர் வென்றடு என்று பாடங்கொண்டதையே நாவலர் வேன்றடு என்று பாடங் கொண்டு பதிப்பித்துள்ளார். நாவலர் கொண்ட பாடமே பொருளுக்குப் பொருந்துவதாயும் உயர்ந்த பொருள் தருவதாயும் உளது.

இனி, புறநானூறு 279 ஆம் பாட்டிலே, 'இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇ..... ஒருமனல்ல தில்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே.

என்ற பாடம் பிற பதிப்புக்களிலே காணப்படு கிறது. மறக்குல மாதொருத்தி மனந்துணிந்து தன் ஒரு மகனைச் செருக்களம் செல்ல விடுபவள் மயங்கினாள் என்றல் பொருந்தாது. இது முயங்கி என்று இருத்தலே சிறப்புடைத்து. முயங்கி என்பதைப் பாடபேதமாகக் காட்டியுள்ளனராயின் அதுவே சிறந்ததாக ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கும்.

பொருட் சிறப்புள்ள பாடங்களை நாம் நாவலர் பெருமானின் பதிப்புக்களிலும் அவரை அடியொற்றிய புலவர் நூல்களிலும் கண்டு களிக்கலாம். அவர் செய்து வைத்த அருந்தொண்டு என்றும் மங்காது சிறக்க.


புத்தாண்டே வருக (2024)!

புத்தாண்டே வருக (2024)!

எங்கும் பசுமை! இதழ்களில் பனித்துளி!
பொங்கும் குளிரால் பொழுது புலர்ந்திட
ஈரா யிரத்திரு பத்தினான் காண்டே!
சீராய் வந்தனை திருவடி வணக்கம்!
உலகம் உவப்ப உந்தன் அருளே
நிலவுக! யாண்டும் நீணிலம் மீதில்
அன்பும் வளமும் அமைதியும் மக்கள்
இன்புற் றிருக்க ஏற்றம் தருவாய்!
வறுமையும் பிணியும் வன்முறைக் கொடுமையும்
சிறுமைப் படுத்தும் சாதி மதங்களின்
பிணக்கும் ஒழிந்து பேருலகம் எல்லாம்
இணக்கம் வளர இனிதாய் வருவாய்!
புத்தாண் டென்னும் பொன்மகளே!
இத்தரை உன்னால் ஏற்றம் பெறுகவே!
                   -கொல்லிக்கிழான் (புலவர் வெ. ரா. துரைசாமி)

https://kollikilan.blogspot.com/2023/12/PuthaandeVaruka.html
(one ciir is changed to reflect the current year, 2024. NG)

    கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக
    அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த
    நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைந்து
    எல்லோரும் வாழ்க இசைந்து!
                            - இராமலிங்க அடிகள்

     புத்தாண்டே வருக!
       (கலிவிருத்தம்)

நாணயத்தால் நம்மை நன்றாக ஏமாற்றி
வீணாக நமது வாக்குகளைச் செய்கின்ற
அரசியலில் புதிதாய் அறம்பேணும் தலைவர்கள்
உருவாக இந்தப் புத்தாண்டு மலரட்டும்.
                              - கவிஞர் இரமணி

எண்டிசையும் ஒன்றிணைவோம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)


வடதிசை வசிப்பவர் அடிமனக் கருத்திலும்

தென்றிசை மக்களின் சிந்தனை யாவிலும்

குடதிசை மாந்தர்தம் கொள்கைப் பிடிப்பிலும்

குணதிசை வாழ்பவர் குணத்தின் திறத்திலும் 

இழையாய் ஓடிடும் உணர்ச்சிகள் யாவும்நம்

முழுமனத் தியல்பின் வேறெனப் பாரோம்!


எண்டிசை வாழ்வோர் யாவரும் நமரென

மண்மிசை முழங்கி வான்முர சறைவோம்! 


உடுக்கை இழந்தவர் போல்பிறர் உறுதுயர்

தடுக்கும் பரிவினைப் பெருக்கிட முனைவோம்;

செருக்குறு பகையினை வளர்க்கும் போர்களால்

நெருக்குறும் மானுடம் நெறிப்பட இணைவோம்; 


நம்மெதிர் காலம் செவ்வுறல் கருதிப்

பேதங்கள் யாவையும் தீதென மறுப்போம்;

யாதும் ஊரே யாவரும் கேளிரென்

றோதிடும் நெறியே உயர்வெனக் கொள்வோம்; 

நானிலம் முழுதும்நல் லுறவை நாட்டி

மானுடக் கடலாய் வானுற எழுவோம்.


வீழினும் தாழினும் இனிப்பிரி வுறோமென்

றொன்றிணைந் தென்றும் வெல்வமிங்(கு) ‘இதுவே

நிசம்,இது நிசம்!'என இசைக்குமெண் டிசையே!

                                           - இமயவரம்பன்

இழுக்கம் எனுஞ் சொல்லின் முதன்மைப் பொருள் - திருக்குறள் முதலாய இலக்கியங்களில்.

 இழுக்கம் எனுஞ் சொல்லின் முதன்மைப் பொருள் - திருக்குறள் முதலாய இலக்கியங்களில். 

அறம் X மறம், அன்பு X வன்பு, ஒழுக்கம் X இழுக்கம் ... இவையாவும் முழுமையான எதிர்ப்பதங்கள் ஆகா. சொற்களின் பொருளைக் கூர்ந்து ஆய்ந்தால் உணரலாகும். காட்டாக, இழுக்கம் என்ற சொல்லின் முதன்மைப் பொருளை, இலக்கியங்கள், பண்டைப் பெரும்புலவர்களின் உரைகள், அகராதிகள் என்ன தருகின்றன எனப் பார்க்கலாம். The above pairs are obviously chosen for their rhyming pattern, but they are not exact opposites. English professor, Harold Bloom has written extensively on Shakespeare who is the father of modern English. In the same sense, Kavichakravarthi Kampan is the father of modern Tamil. Kampan posits "aRam" vs. "maRam" in his epic. For "aRam", there is Sri Rama, where as for "maRam", there is Ravana of Lanka (< arangam). Even though this is poetic explanation, we know that "aRam" and "maRam" are NOT opposed to each other. For example, Mahendra Pallavan or Rajaraja Chozha Devar, or his son with a mighty Navy were practising both "aRam" and "maRam". Let me give two of Kampan verses. வருவித்துரைத்தல் உத்தியால் ஒழுக்கம் எனும் சொல்லை இழுக்கம் முன்னால் பெய்வர். புலவர் குழந்தையின் தமிழர் வாழ்த்தும் முக்கியமானது.


தொல்காப்பியர் கூறும் இழுக்கம் என்ற சொல்லின் பொருள், வழு (அதாவது, தவறு, பிழை, தப்பு) என்று பவணந்தி முனிவர் ஒரு நூலுக்கான 10 சிதைவுகள் எவையென விளக்கியிருக்கிறார். இந்த அரிய தொல்காப்பியம்-நன்னூல் தொடர்பை இவ்விழையில் பார்த்தோம். செய்யுள்களில் சொல்லை வருவித்துப் பொருள்கொள்ளுதல் ஆயிரக் கணக்கான உதாரணங்களில் உண்டு. எதுகையால் ஏற்படும் ஓசை நயத்துக்கு, ஒழுக்கம், இழுக்கம் என ஒரு குறளில் வருகிறது. அப்போது, (ஒழுக்க நெறியினின்று) இழுக்கம் என்று வருவித்து உரைப்பர் உரைகாரர்கள். சொல்லெச்சம் என்பர் இலக்கணிகள்.

கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு
  நாள் இழுக்கம் நட்டார் செயின் - குறள் 81:8
 
பொழிப்பு (மு வரதராசன்): பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும் கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந் நண்பர் தவறு செய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.
*இழுக்கம் = தப்பு*
மணக்குடவர் உரை: நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம்.
இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது.

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து

*இழுக்கம் = தப்பு*
மணக்குடவர்: ஒழுக்கத்தினின்று நீங்கார் அறிவுடையார்: அதனைத் தப்பினாற் குற்றம் வருதலை அறிந்து என்றவாறு.
இஃது, அதனை அறிவுடையார் தவிரார் என்றது; குற்றம் வருதல் பின்னே காணப்படும்.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
  எய்துவர் எய்தா பழி - குறள் 14:7
பொழிப்புரை: ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
பதவுரை:
ஒழுக்கத்தின்-ஒழுக்கத்தினால்; எய்துவர்-அடைவராவர்; மேன்மை-உயர்வு; இழுக்கத்தின்-தவறுதலால்; எய்துவர்-அடைவர்; எய்தா-அடைவதற்கு உரித்தல்லாத; பழி-பழிக்கப்படுதல்.

  ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
  இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 14:3

பொழிப்பு (மு வரதராசன்): ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.
மணக்குடவர் உரை: ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும். இது குலங்கெடுமென்றது.
ஒழுக்கத்தின் ஒல்கார் எனத் தொடங்கும் குறளில், இழுக்கம் = தப்பு எனக் கூறிய மணக்குடவர், இங்கே இழுக்கம் = தப்பி ஒழுகுதல் என்றார்.

இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
  ஒழுக்கம் உடையார் வாய் சொல் - குறள் 42:5
மணக்குடவர் உரை: வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள்.
இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.

 இழுக்கா (3)
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
  இழுக்கா இயன்றது அறம் - குறள் 4:5
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
  நோற்பாரின் நோன்மை உடைத்து - குறள் 5:8
அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா
  மானம் உடையது அரசு - குறள் 39:4
 
இம்மூன்று குறளிலும், ஆ என்னும் எதிர்மறையிடைநிலை உள்ளது.
இழுக்கா = தவறாத/தப்பாத/வழுவாத/பிழையாத

ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை:
மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும். (மு.வ.)

ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை (பரிமேலழகர்)
 
 அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு

இழுக்கா = தப்பாத (மணக்குடவர் உரைக்கிறார்):
அறத்தில் தப்பாமல் ஒழுகி அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து மறத்தில் தப்பாத மானத்தையுடையவன் அரசன்.

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல், அறமல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான். (மு.வ.)

 இழுக்காமை
இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை
  வாயின் அஃது ஒப்பது இல் - குறள் 54:6
 
மணக்குடவர்: யாவர்மாட்டும் எல்லாநாளும் தப்புச்செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின் அதனையொக்க நன்மை பயப்பது பிறிதொன்று இல்லை.
இது முறைமை செய்யுங்கால் கடைப்பிடித்துச் செய்யவேண்டு மென்றது.
 
 யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காத தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.
 
 இழுக்கார்
 ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
  இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 96:2
 
மணக்குடவர்: ஒழுக்க முடைமையும் மெய்ம்மை கூறுதலும் அற்றம் மறைத்தலாகிய நாணமுடைமையும் ஆகிய இம்மூன்றினையும் தப்பார் உயர்குடிப்பிறந்தார்.
 
 இழுக்கியான்
 முன்னுற காவாது இழுக்கியான் தன் பிழை
  பின் ஊறு இரங்கிவிடும் - குறள் 54:5

இக்குறளின் மணக்குடவர் உரை கிடைக்கவில்லை. தமிழின் போகூழ் காரணமாக.

பரிப்பெருமாள்: எதிரது ஆகவே பழிவரும் வழியைக் காவாதே அதனை இகழ்ந்து தப்பச் செய்தவன்;

வரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து தவறியவன், பின்பு அவை வந்துற்றபோது தன் தவறு நினைந்து இரங்குவான்.

 இழுக்கம் என்ற பழஞ்சொல்லின் முதற்பொருளை ஆராய விரும்புவோர் மேலே உள்ள எல்லாக் குறளும், பழைய உரைகளும் ஊன்றிக் கற்க. ஒரு சில காட்டுகிறேன். தொல்காப்பிய நூற்பாவுக்கு, பவணந்தியாரின் குறிப்புரையாக அமைந்துள்ள நூற்பாவும் கொடுத்துள்ளேன். தொல்காப்பியர் நூற்சிதைவு 10 என்பவை எல்லாவற்றையும் நன்னூலார் ஆள்கிறார்.

ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

இக்குறளில் ஒழுக்க நெறியில் இருந்து தவறுதல் (= இழுக்கம்) எனப் பொருள் தருகின்றனர். (ஒழுக்க நெறியில் இருந்து) இழுக்கம் = தவறுகை. *ஒழுக்க நெறியிலிருந்து* என்பதை வருவித்து உரைப்பதால், இதற்குச் *சொல்லெச்சம்* என்கிறது தமிழ் இலக்கணம். ஒப்பீடு:   “பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவனடி சேரா தவர்.” *சேர்ந்தார்* எனச்  சொல்லெச்சம் கொண்டு உரைகூற வேண்டியுள்ளது. -பிறவிப் பெருங்கடல் நீந்துவர் (இறைவனடி சேர்ந்தவர்)  - இங்கே சேர்ந்தவர் என்னும் சொல் வருவித்து விரிக்கிறோம் (பரி.). அதே போலத் தான், ”ஒழுக்கம் உடைமை குடிமை; (ஒழுக்க நெறியினின்றும்) இழுக்கம் (= தவறி நடத்தல்) இழிந்த பிறப்பாய் விடும்” -குறள்.  

இழுக்குதல், இழுக்கம், இழுக்கா (எதிர்மறையிடைநிலை) நிகழும் திருக்குறள்களில் இவற்றின் முதன்மைப் பொருளைப் பண்டை உரையாசிரியர்களைக் கொண்டு நிர்ணயிக்கலாகும். உ-ம்: முதல் உரைகாரர் மணக்குடவர். வள்ளுவரும், மணக்குடவரும் ஒரே சமயத்தார். படிமையோன் என்பது அச்சமயத்தவர் பற்றிச் சொல்கையில் பயன்படுத்துவர் (தொல். பாயிரம்). 1,2, ... 6 அறிவு பற்றி வகுத்தவரும் அச்சமயத்தவரே. வள்ளுவர்-மணக்குடவர் சமயத்தார் தமிழை இலக்கிய, இலக்கண மொழியாக்கிய வரலாற்றை, ஐராவதம் மகாதேவன், ஹார்வர்ட் பல்கலை நூலில் கற்றறியலாம். http://nganesan.blogspot.com/2022/03/tamil-epigraphy-iravatham-harvard-2003.html

அடைப்புக் குறிகள் உள்ளிட்ட தரிப்புக்குறிகளை அறிமுகப்படுத்திச் சொற்களுக்கு நடுவில் இடைவெளி  கொடுத்து, காகிதத்தில் அச்சிடும் தொழில்நுட்பத்தைக் கொணர்ந்தவர்கள் ஐரோப்பியர் (16-ம் நூற்றாண்டில்). சொல்லெச்சம் எனும் வருவித்து உரைத்தல் செய்யும்போது, அடைப்புக்குறி (Brackets) கொடுத்துத் தெளிவாக்குகிறார் லசாரஸ். பழம்பெரும் புலவர்களிடம் தமிழ் கற்று எழுதிய திருக்குறள் உரை:
The Kural of Tiruvalluvar: With the Commentary of Parimelazagar and a Simple and Clear Padavuray; to which is Added an English Translation of the Text by J. Lazarus. ஊ. புஷ்பரத செட்டி, 1885.
https://books.google.com/books?id=a9kZAAAAIAAJ  (This book needs to be added to https://projectmadurai.org )
மணிமேகலைக் காப்பியத்தில் இருந்து உதாரணம், 1943-ம் வருட நூல்: https://tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0016965_திருக்குறள்_கதைகள்.pdf

MTL: இழுக்கம் iḻukkam , n. இழுக்கு-. 1. Fault, offence, transgression; பிழை. நாளிழுக்க நட்டார் செயின் (குறள், 808). 2. Violation of social and caste rules; ஒழுக்கந்தவறுகை. இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் (குறள், 133). 3. Ignominy, discomfiture; ஈனம். மழுவாளவ னிழுக்கமுற்ற வன்றி னும் (கம்பரா. அயோத். மந்திர. 42).

https://books.google.com/books?id=Y0U0AQAAMAAJ& இந்த அகராதி(1909)  தருவது:
இழுக்கம் - குறை, தப்பிதம், தளர்வு, தவறு, தாமதம், பின்வாங்குதல், வசை, வழிவிலகுதல்.
   ==================

-ஆ என்னும் எதிர்மறை இடைநிலை உள்ள குறள்களை வாசித்தால், இழுக்கம் = தவறு என்பது முதன்மைப்பொருள் என அறியலாம்.
  அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
  *இழுக்கா* இயன்றது அறம் - குறள் 4:5

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இந்த நான்கனையும் *இழுக்காது (=தவறாது)*  இயன்றது அறம் .

ஆற்றின் ஒழுக்கி அறன் *இழுக்கா* இல்வாழ்க்கை
  நோற்பாரின் நோன்மை உடைத்து - குறள் 5:8
 
        அறன் *இழுக்கா* இல்வாழ்க்கை = அறத்தைத் *தவறாத/வழுவாத/பிழையாத/தப்பாத* இல்வாழ்க்கை
 
அறன் *இழுக்காது* அல்லவை நீக்கி மறன் இழுக்கா
  மானம் உடையது அரசு
  ===============
 
  பழமொழி நானூறு:
சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்,
பட்ட *இழுக்கம்* பலவானால் - பட்ட
பொறியின் வகைய கருமம்; அதனால்,
'அறிவினை ஊழே அடும்'.

மிக்க அறிவோரும், *தவறான* காரியங்களைச் செய்ய நேர்தல், ஊழ்வசத்தின் காரணமாகவே என்பது சொல்லப்பட்டது. பொறி - தலை எழுத்து எனவும் சொல்வர். 'இழுக்கம்' (= தவறு) - விருத்தம் என்றும் பாடபேதம். 'அறிவினை ஊழே அடும்' என்பது பழமொழி. 'பொறியின் வழிய கருமம்' என்பதும் ஒரு பழமொழியாகக் கருதலாம். - புலியூர்க் கேசிகன்.

பொறி என்றால் விதி (தலையெழுத்து) என்று இந்தப் பழமொழி வெண்பாவைக் காட்டி,  கற்பொறி - நடுகல் எழுத்து என்று இருத்தல் அருமை என்பார் புலவர் செ. இராசு. இந்தியாவின் ஒரே நடுகல் கல்வெட்டு உள்ள பழமங்கலம் (மொடக்குறிச்சி வட்டம், ஈரோடு மாவட்டம்). இதன் இறுதியில், “இக் கற்பொறி இரக்ஷிப்பான் ஶ்ரீபாதம் என் தலைமேலே.” என வருகிறது, https://groups.google.com/g/vallamai/c/VBDgUOEg96c/m/6z8f-FJ9AgAJ
  ===================
 
ஏலாதி 62:
கூத்தும் விழவும் மணமும் கொலைக்களமும்
ஆர்த்த முனையுள்ளும் வேறிடத்து மோத்தும்
ஒழுக்கம் உடையவர் செல்லாரே செல்லின்
*இழுக்கம்* இழவும் தரும்

கூத்தாடுமிடம், விழா நடக்குமிடம், திருமணம் நடக்குமிடம், மன்னன் குற்றவாளியைக் கொல்லும் இடம், ஆரவாரமுள்ள போர்க்களம், பழக்கம் இல்லாத புதிய இடம். இவற்றுக்கெல்லாம்,  வேதமும், (வேத நெறி நிற்கும்) ஒழுக்கம் உடையவர் செல்ல மாட்டார். அவ்வாறு சென்றால், (மறை ஒழுக்கத்தினின்றும்) தவறுதலும், பொருள், உயிர் இழப்பும் வரும்.

(1)> (வேதநெறி) ஒழுக்கம் உடையவர், (2) (மறை ஒழுக்கத்தினின்றும்)  இழுக்கம் .
அடைப்புக்குறிக்குள் இருப்பன வருவித்து உரைப்பவை. சொல்லெச்சம் என்பர்.
இங்கே இழுக்கம் = தப்பி நடத்தல்.

http://vaiyan.blogspot.com/2017/03/62-elati-62.html
   ===============
   
இழுக்கம் == தவறு. இதனை, இழுக்கம், இழிவு இரண்டு சொல்லையும் தமிழ்மக்களைப் பாடும் விருத்தத்தில் ஒரே வரியில் பயன்படுத்தி வேறுபாட்டை விளக்குகிறார் புலவர் அ. மு. குழந்தை. ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - குறள்.

                தமிழ் மக்கள் :
   ஒழுக்க மென்ப துயிரினு மேலதன்
   இழுக்கம் போலிழி வில்லை யெனுஞ்சொலைப்
   பழக்க மாக்கிப் பயின்று பயின்றுயர்
   வழக்க மாந்தமிழ் மக்களைப் போற்றுவோம்!

சொற்பிரிப்பு
ஒழுக்கம் என்பது உயிரினும் மேல்; அதன்
இழுக்கம் போல் இழிவில்லை எனும் சொல்லைப்
பழக்கம் ஆக்கிப் பயின்று பயின்று உயர்
வழக்கமாம் தமிழ் மக்களைப் போற்றுவோம்

ஒழுக்கம் என்பது தமது உயிரைவிட மேலானதாக, ஒழுக்க நெறியில் இருந்து தவறி/தப்பி/வழுவி/பிழைத்துத் தரம்கெட்ட வாழ்க்கை முறைபோன்ற இழுக்கு வேறு ஏதும்  இல்லை என்று உணர்ந்து,  உயர்ந்த வாழ்க்கையை வாழ்வதையே பழக்கமாக்கிச் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்த  தமிழ் மக்களைப் போற்றுகிறார்!

வருவித்து உரைத்தல் - சொல்லெச்சம் - சில உதாரணங்கள்:
--------------------------------------------
(1)
”‘வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்’ (தொல்காப்பியம், களவியல் 22) என்ற நூற்பாவின் ‘வரையா நாளிடை வந்தோன் முட்டினும்’ என்னும் பகுதிக்கு இப்பாட்டினை எடுத்தோதி. ‘இதன்கண் என்றான் என ஒருசொல் வருவிக்க’ என்றார் இளம்பூரணர். ” https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/

(2) நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவில்நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே. - திருமந்திரம்

”தியான முதிர்ச்சியில் சிவாநுபவத்தைத் தலைப்படல் கூடும்` என்பதற்கு, ``நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டன்`` என்பதனை இறுதிக்கண் கூறினாராயினும், அதனை இரண்டாம் அடியாக வைத்து, அதன்பின், `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவித்துரைத்தல் கருத்தென்க. ”

(3)  சொல்லெச்சம் பற்றி விளக்க இக்குறள் உரை போதும்.
ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடு இல்லை; போகாறு அகலாக் கடை.

பரிமேலழகர் உரை: ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்: போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறிஅளவு அதனின் பெருகாதாயின்.
('இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள் என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.)
 
 பொருள், அளவு :: இரண்டும் வருவித்து உரைத்தல் மரபு. எனவே, இவையிரண்டும் *சொல்லெச்சம்*.
 
 ==============
 
 கம்பர்:
         என்றனன்இயம்பி, ‘வீதி  ஏகுதல்இழுக்கம்’ என்னா,
         தன்தகை யனையமேனி சுருக்கி,மாளிகையில் சார
         சென்றனன் -என்ப மன்னோ - தேவருக் கமுதம் ஈந்த
         குன்று எனஅயோத்தி வேந்தன் புகழ்என,குலவு தோளான்.
 
  வீதி ஏகுதல் - வீதி வழியே போவது; இழுக்கம் என்னா - தவறு நேர்வதற்குக்
காரணம் என்று நினைத்து; தன் தகையனையமேனி - தன்னுடைய
சிறப்புக்கேற்ற திருமேனியை; சுருக்கி - சுருக்கிக் கொண்டு

  'முத் தலைஎஃகன், மற்றை முராந்தகன், முனிவன், முன்னா
   அத் தலை நம்மைநோனா அமரர்க்கும், நகையிற்றாமால்;
   எத் தலை உலகும்காக்கும் வேந்த ! நீ, வேற்றார் ஏவ,
   இத் தலைஎய்தினானைக் கொல்லுதல் இழுக்கம்; இன்னும்,

கொல்லுதல் இழுக்கம் = கொல்லுதல் தவறு.

‘பொன் பிறங்கல் இலங்கை, பொருந்தலர்
என்பு மால் வரைஆகிலதேஎனின்,
இற் பிறப்பும்,ஒழுக்கும், இழுக்கம் இல்
கற்பும், யான்பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன் ?

  இழுக்கம் இல்லாத கற்பு = தவறு/தப்பு/பிழை/வழு இல்லாக் கற்பு  சீதாபிராட்டியாருடையது.
 
  ================
 
   (பெருங்கதை - கொங்குவேளிர்

இன்னா வெம் நோய் எத்திறத்தாயினும்      
ஒடுங்கா உள்ளமொடு அகற்றுவல் யான் என
கடும் சூள் அறைஇ காவலன் கேட்ப
ஒழுக்கினும் கற்பினும் இழுக்கம் இன்று என
பசைஇய கேள்வனை பைம்_தொடி வணங்கி

ஒழுக்கினும், கற்பினும் இழுக்கம் இன்று = ஒழுக்கத்திலோ, கற்பிலோ தவறு இல்லை

====================================

     சிலப்பதிகாரம்
மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது
ஒல்கா வுள்ளத் தோடு மாயினும்
ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு
இழுக்கந் தாராது

மதம் - இளமைக்கும் யானைக்கும் ஏற்பக் கொள்க. இடங்கழி - வரம்பு கடக்கை ; கழி காமமுமாம்; 1"இடங்கழி மான்மாலையெல்லை" என்பதன் உரை காண்க. இளமையாற் காமம் மீதூரப் பெறினும் நெறி தவறிச் செல்லார் என்றபடி.  

           ஆசாரக்கோவை
அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
முழையுறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய எளிய பயின்றனவென் றெண்ணி
இகழின் இழுக்கம் தரும்.

இழுக்கம் தரும் - தவற்றைத் தந்துவிடும். அதாவது, பெருந்துன்பம் தரும்.

       சிந்தாமணி
விழுத்திணைப் பிறந்து வெய்ய வேட்கை வேர் அரிந்து மெய் நின்று
இழுக்கம் ஒன்றானும் இன்றி எய்திய தவத்தின் வந்து
வழுக்குதல் இன்றி விண்ணோன் வச்சிர நுதியின் இட்ட
எழுத்தனான் தந்த இன்பம் இன்னும் நீ பெறுதி என்றாள்

இழுக்கம் ஒன்றானும் இன்றி = தவறு ஒன்றுகூட இல்லாமல்.
இழுக்கம் ஒன்றானும் இன்றி = தவறு எவ்வாற்றானும் இல்லாமல் (நச்சினார்க்கினியர், சிந்தாமணியுரை)
https://temple.dinamalar.com/news_detail.php?id=13556

=======================
”மேலும் பல குறள் உரைகளில் சில புதிய சொற்களை *வருவித்து* உரைத்து உரைவழங்கும் உத்தியைச் சிறப்பாகக் கையாளுகின்றார். சான்றாக,

உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு   - குறள்: 339
கலைஞர் உரை: நிலையற்ற வாழ்க்கையில் உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு, திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு இக்குறள் உரையில் குறளில் இல்லாத புதிய சொல்லாக நிலையற்ற வாழ்க்கையில் என்று சேர்த்து நிலையாமை என்ற அதிகாரப் பொருளை நினைவு கூர்கின்றார்.” http://nailango.blogspot.com/2008/01/blog-post_31.html

~NG

>On Thu, Aug 17, 2023 at 8:32 AM Ramamoorthy Ramachandran <rawmurthee@gmail.com> wrote:
>மிகச் சிறந்த பதிவு! - புலவர் இராமமூர்த்தி 

நன்றி, ஐயா. இழுக்கம் என்ற சொல்லைப் பல நூல்களில் பார்க்கலாம். தொல்காப்பியம், குறள், சிலம்பு, ஏலாதி, பெருங்கதை, கம்பன், ... என மிகப் பல இலக்கியங்கள்.
இழுக்கம் (< இழுக்கு-தல்) என்பதன் முதன்மைப் பொருளாக,  தவறு, வழு, பிழை என்பதாக எல்லா இடத்திலும் ஆள்கிறார்கள் பண்டை ஆசிரியர்கள்.
எனவே, இழுக்கம் - தப்பு/தவறு, வழு, பிழை எனக் கொள்ளவேண்டும். ஒழுக்கம் = தப்பு என விளக்கியுள்ளார் மணக்குடவர், குறளின் முதல் உரைகாரர்.
எதுகைக்காக, ஒழுக்கம் என்று தொடங்கும் குறள் ஒன்றில் இழுக்கம் என்ற சொல் வருகிறது:
           ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.
இங்கே, (ஒழுக்க நெறி தவறுகை ஆகிய) இழுக்கம் என, ஒழுக்கம் என்ற சொல்லை வருவித்துப் பொருள் உரைப்பர்.

சென்னைப் பல்கலைப் பேரகராதி:
இழுக்கம் iḻukkam , n. இழுக்கு-. 1. Fault, offence, transgression; பிழை. நாளிழுக்க நட்டார் செயின் (குறள், 808). 2. Violation of social and caste rules; ஒழுக்கந் தவறுகை. இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் (குறள், 133). 3. Ignominy, discomfiture; ஈனம். மழுவாளவ னிழுக்கமுற்ற வன்றி னும் (கம்பரா. அயோத். மந்திர. 42).

குறள் 133-ன் மேற்கோளில், இழுக்கம் = (ஒழுக்கம்) தவறுகை என, ஒழுக்கம் என்ற சொல்லை வருவித்துப் பொருள்கோள் காண்க.

இதனை, அழகாக நன்னூலாரும் விளக்கியுள்ளார்:
பழித்த மொழியான் இழுக்கம் கூறல் = வழூஉச்சொல் புணர்த்தல்
அதாவது, இழுக்கம் == வழு என்கிறார் நன்னூலார்.

MTL entry:
வழு vaḻu , n. < வழுவு-. 1. Error, mistake, failure, fault, lapse;
தவறு. (தக்கயாகப். 7.) 2. Damage, loss; கேடு. (சூடா.) 3. Sin; பாவம்.
வழுவாய் மருங்கிற் கழுவாயுமுள (புறநா. 34). 4. Scandal, ill-repute;
பழிப்புரை. வழுவெனும் பாரேன் (சிலப். 16, 69). 5. (Gram.) Solecism,
impropriety in language; deviation from rule; திணைபால் முதலியன தத்தம்
இலக்கணநெறி மயங்கி வருவதாகிய குற்றம். (நன். 375.)

பிற பின்,
நா. கணேசன்


> On Thu, Aug 17, 2023, 14:31 N. Ganesan <naa.ganesan@gmail.com> wrote:
ஒரு நூலின் சிதைவுகள்
---------------------

     சிதைவெனப் படுபவை வசையற நாடின்
     கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
     குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
     பொருளில மொழிதல்மயங்கக் கூறல்
     கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல்
     பழித்த மொழியான் இழுக்கம் கூறல்
     தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்
     என்ன வகையினும் மனங்கோள் இன்மை
     அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும்
     -------- தொல்காப்பியம், பொருள், மரபியல், 109

தொல்காப்பியர் பட்டியலிடும் நூற்சிதைவுகளை என்னென்ன என விளக்கும் உரையாக,
நன்னூலில் பவணந்தி முனிவர் சூத்திரித்துள்ளார்:

     குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
     கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
     வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்
     வெற்றெனத்தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
     சென்றுதேய்ந்து இறுதல் நின்றுபயன் இன்மை
     என்று இவை ஈரைங் குற்றம் நூற்கே

     தொல்காப்பியம் - நன்னூல்
    ----------------------
    கூறியது கூறல் = கூறியது கூறல்
    மாறுகொளக் கூறல் = மாறுகொளக் கூறல்
    குன்றக் கூறல் = குன்றக் கூறல்
    மிகைபடக் கூறல் = மிகைபடக் கூறல்
    பொருளில மொழிதல் = வெற்றெனத் தொடுத்தல்
    மயங்கக் கூறல் = மயங்க வைத்தல்
    கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல் = சென்று தேய்ந்து இறுதல்
    பழித்த மொழியான் இழுக்கம் கூறல் = வழூஉச்சொல் புணர்த்தல்
    தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் = மற்றொன்று விரித்தல்
    என்ன வகையினும் மனங்கோள் இன்மை = = நின்று பயன் இன்மை.

மிக அருமையாகப் பவணந்தி முனிவர் தொல்காப்பியர் நூற்பாவுக்குப்
பொருள் தந்துள்ளார். இழுக்கம் பற்றி மடலாடினோம். உ-ம்: குறள், கம்பன், ...

பழித்த மொழியான் இழுக்கம் கூறல் = வசைச்சொற்களால், தவறுகளைக் கூறுதல்.
Tolkappiyar cautions that an author should not stoop low to do
personal attacks, instead just critique the errors in ideas expressed
in the opponent's work.

இதனை, அழகாக நன்னூலாரும் விளக்கியுள்ளார்:
பழித்த மொழியான் இழுக்கம் கூறல் = வழூஉச்சொல் புணர்த்தல்
அதாவது, இழுக்கம் == வழு என்கிறார் நன்னூலார்.
வழு vaḻu , n. < வழுவு-. 1. Error, mistake, failure, fault, lapse;
தவறு. (தக்கயாகப். 7.) 2. Damage, loss; கேடு. (சூடா.) 3. Sin; பாவம்.
வழுவாய் மருங்கிற் கழுவாயுமுள (புறநா. 34). 4. Scandal, ill-repute;
பழிப்புரை. வழுவெனும் பாரேன் (சிலப். 16, 69). 5. (Gram.) Solecism,
impropriety in language; deviation from rule; திணைபால் முதலியன தத்தம்
இலக்கணநெறி மயங்கி வருவதாகிய குற்றம். (நன். 375.)

~NG

சிந்துவெளி மகர எழுத்தில் ஸ்வஸ்திகமும், சங்க காலத் தொடர்ச்சியும்

சிந்துவெளி மகர எழுத்தில் ஸ்வஸ்திகமும், சங்க காலத் தொடர்ச்சியும்

Abstract: Zelia Nuttall, Harvard Museum, in her book, The Fundamental Principles of Old and New World Civilizations (1901), proposed the astronomical basis of the Swastika symbol formation. This has to do with the seasonal positions of the Ursa Major constellation with respect to the Pole Star. My lecture proposes its link with the Indus civilization and explains the non-natural, inverted-V shape of the tail of the Indus Makara (Crocodile) sign. The tail is shown in top, left or right positions of the Makara sign in the Indus script. I always wonder why the Makara sign's tail is a sharp-V shape, and the seasonal Ursa Major positions resolve the question. Also, there are Swastika-shaped cist burials in Tamil country during the megalithic. The Makara sign in the Post-Harappan period gets associated with Varuṇa in the Vedic texts after the language shift in North India, and in Tamil Tolkāppiyam.

This lecture in Connecticut is a pre-run for the 11th World Tamil Conference organized by IATR.

References:

(1)  IVC religion in Iron Age Tamil Nadu (see Makara sign in Figure 2):

https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/page/n1/mode/2up

(2) கவரி மா -  Dravidian word for Gauṛ bison and Tibetan yak

https://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

(3)  Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai. https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

Three slides from the presentation: 


























Dr. Kathir Krishnamurti, author of Scientific Tamil books and expert in mobile and radar tech, Boston, MA wrote:
<<<
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி' என்ற பாட்டைக் கேட்டுள்ளோம். அண்ணாவைப் பார்க்கும் வரம் கிடைக்காதவர்கள் நாம். அம்மா சொல்லுவார் அறிஞர் அண்ணா இறந்தபோது கூடிய கூட்டத்தை எண்ணி உலகம் வியந்ததென்று. 


பொறிஞர்கள் தமிழை ஆர்வத்துடன் கற்றும் பிறருக்குக் கற்றுக்கொடுத்தும் எழுதியும் பேசிவதைக் கேட்டுப் பார்ப்பதரிது. என் வட்டத்தில் பேரா. செல்வா மேடையில் அழகாகப் பேசுவார். அவர் எழுதுவதைப் படித்து இன்றும் நான் கற்று வருகின்றேன்.  நேரில் கண்டும் கேட்டும் இருக்கேன். அண்ணன் மணிவண்ணனின் தமிழும் அழகாக இருக்கும். காணொளியில் கண்டுள்ளேன்.  அண்ணாப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் குழந்தைசாமியும் நன்றாக மேடையில் பேசுவார் என்று கேள்வியுற்றேன்.


இந்த வரிசையில்
அன்பு அண்ணன் முனைவர் நாக கணேசன் தமிழ் மேடையை இலாவகமாகக் கையாண்டார்.  நானும் வாணியும் நேரில் சென்று கனிட்டிக்கெட்டு மிடில்டவுன் கோவிலரங்கத்தில் இலக்கியச் சொற்பொழிவைக் கண்டு களித்தோம்.  சிந்து சமவெளி முத்திரையைப் பற்றி தான் கண்டாய்ந்தவற்றை அழகுத் தமிழில் கதைபோல் சொல்லி அனைவரின் கவனத்தையும் ஒன்னரை மணி நேரம் ஈர்த்து வைத்திருந்தார். ஆய்வு ஏன்? எதற்கு? எப்படி? என்ற மூன்று கேள்விகளுக்கு பதிலுடன் திரும்பி வருமாறு செம்மையாக அமைந்திருந்தது. முத்திரையில் இருப்பது கங்கையில் இருந்த முதலை என்று அழகாக நிறுவியிருக்கார்.
நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் முன்னணி அறிஞராக விளங்கி தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்ப்பவர். கருத்தில் தெளிவும் ஆழ-அகல விட்டம் கண்டவர். கதைபோல் பேசப் பேசக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒளிப்படங்களுடன் பேசியிருந்தது மிகவும் சிறப்பு. 


ஞாயிறு மதியம் நன்றாக கழிந்தது. கனெட்டிக்கட்டு தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். இப்படியான சான்றுகளுடைய மகனை ஈன்ற தமிழ்த்தாய் பெருமையும் பேருவகையும் கொண்டிருப்பாள்;  ஐயமில்லாமல் மொழிவோம் என்று மொழிந்த விழாக் குழுவினருக்கும் ஏற்பாடு செய்திருந்த தோழர்கள் அனைவருக்கும் நன்றி!
6/12/2023
கதிரவன்
>>>

Thanks, Kathir. I will give a timeline of evolution of the village religion found all over Indian subcontinent, and the interactions between Great and Little Traditions of India (an anthropological term). Enjoy!

Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur:
Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai 4700 years old amulet,
https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

கொற்றவையும், புலியும் - ஒரு 4500 ஆண்டு காலத் தொடர்பு:
http://nganesan.blogspot.com/2021/05/tiger-durga-indus-cilappatikaram.html

Gharial god and Tiger goddess in the Indus valley,
Some aspects of Bronze Age Indian Religion, my paper, 2007
https://archive.org/details/IVCReligionByNagaGanesan2007/page/n5/mode/2up

Paṭṭa-Mahiṣī: Proto-Koṟṟavai goddess in Indus civilization (Banawali and Mohenjadaro)
http://nganesan.blogspot.com/2021/01/banawali-mohenjadaro-proto-durga.html

Indus seal, M-312 - Proto-Koṟṟavai war with Mahiṣa
http://nganesan.blogspot.com/2021/01/m312-seal-is-not-jallikkattu.html

Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts: Dravidian word for Gauṛ bison and Tibetan yak  
http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

----------------

BTW, Iravatham Mahadevan, during Jallikkattu protests, explained a buffalo seal
as Jallikkattu zebu bull! Any farmer can easily point out the difference between a zebu vs. buffalo.

see 15 years ago, my note on Iravatham's ID of buffalo as bull,
https://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

ஜல்லிக்கட்டு மீதான நீதிமன்றத் தடையை அரசாங்கம் நீக்கியிருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. கலித்தொகை, சிலம்பு போன்ற இலக்கியங்களில் கண்ணனின் ஏறுதழுவல் நிகழ்ச்சி போற்றப்படுகிறது. இந்து நாளிதழில் களத்து மேட்டுப்பட்டியில் உள்ள 1500 ஆண்டு பழமையான ஏறுதழுவல் ஓவியம், 500 ஆண்டுகால ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரையைப் படிக்கலாம்

ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்து முத்திரை (M-312) பற்றிச் சுட்டிக்காட்டிய சேதி இந்து நாளிதழில் வெளியாகி இருக்கிறது. ஹிந்து ஆசிரியருக்கு நான் ஒரு கடிதம் வாயிலாக ஆராய்ச்சிக் குறிப்பினை அனுப்பிவைத்தேன். அக் கடித நகலையும், ஜல்லிக்கட்டு, மஞ்சிவிரட்டு, ஏறுதழுவல் செய்திகளை மேலைநாடுகளின் ஆய்வாளர்கள் ஆய்ந்திருக்கும் கட்டுரைகளின் பட்டியலையும் இங்கே பதிகிறேன். கொற்றி/கொல்லி(Proto-Durga) போர்க்காட்சியைக் காட்டும் முக்கியமான முத்திரை இது.

நா. கணேசன்